ஐ.நா. அமைதி காக்கும் உலகப் பணியில் இலங்கை மீண்டும் பெருமிதம்: படையினரை வாழ்த்திய ஜனாதிபதி அநுர.!!!
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக வெளிநாடு செல்லும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்தார்.
இம்முறை, ஒரே தடவையில் அதிகளவான இலங்கை படையினர் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக புறப்பட்டுச் செல்லவுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளை நேரில் தெரிவிக்கும் வாய்ப்பை பெரும் கௌரவமாகக் கருதுவதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
உலகின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை படையினர் முன்நிற்கும் திறன் கொண்டவர்கள் என்பதை இச்செயற்பாடு உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் கௌரவமும் பெருமையும் கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை உலகின் செல்வந்த நாடாக மாறுவது கடினமானதாக இருந்தாலும், உலகில் பெருமைமிக்க நாடாக உயர முடியும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதேவேளை, அமைதி காக்கும் பணிக்காக புறப்படும் அனைத்து படையினரும் தங்கள் தோள்களில் நாட்டின் பெருமையை சுமந்து செல்கிறார்கள் என்றும், தங்கள் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றி நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



