விமான கொள்வனவு ஊழல் குற்றச்சாட்டு: மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை.!!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்திருந்தது. அதன்படி அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகி விசாரணைக்கு உட்பட்டுள்ளார்.
இந்த விமான கொள்வனவு தொடர்பான விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதே சம்பவம் தொடர்பில் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணையின் முடிவுகள் எதிர்காலத்தில் முக்கிய அரசியல் மற்றும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

