வக்பு சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்குபடுத்தும் உச்ச அமைப்பான வக்பு சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம். மர்ஷட் பாரி உட்பட ஏழு பேரைக் கொண்ட வக்பு சபை உறுப்பினர்கள் தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நியமனம் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்து, மூன்று ஆண்டுகள் காலத்திற்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வக்பு சபை உறுப்பினர்களாக
எம். மர்ஷட் பாரி – தலைவர், அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். இஹ்ஸான் ரஷாதி, எம். வை. ஏ. ரிபாக் அஹமட், ஏ. எம். ஜே. எம். ஜவ்பர், சட்டத்தரணி செய்னுல் மசூதீன், எம். ஏ. எம். அரூஸ், எம். ஐ. அமினுடீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், முஸ்லிம் மத அமைப்புகளின் நிர்வாக நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது புதிய சபையின் முக்கிய பொறுப்பாகும் என தெரிவித்தார்.
மேலும், பள்ளிவாசல் நிர்வாகங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சட்டபூர்வமாகவும் நியாயமான முறையிலும் தீர்க்க புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் மத மற்றும் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.








