பண்டாரவளை நகரம் கனமழையால் வெள்ளக்காடாக மாறியது – வீதிகள் ஆறாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!!!
பண்டாரவளை நகரம் இன்று (11) மதியம் பெய்த கனமழையால் முற்றாக வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் திடீரென கொட்டித் தீர்த்த பேய் மழையால், சில நிமிடங்களிலேயே நகரின் பிரதான வீதிகள் அனைத்தும் ஆறுகள் போல் மாறின. மழைநீர் வேகமாக அதிகரித்ததால் வடிகால் அமைப்புகள் பெருக்கெடுத்து, நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் பரவியது.
வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான அசௌகரியத்தை எதிர்கொண்டனர். பல இடங்களில் பொருட்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை–பண்டாரவளை பிரதான வீதியில் முழங்கால் அளவு நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாகவே இயக்கப்பட்டதுடன், சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மின்சார கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மின் இணைப்புகள் மற்றும் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

