படகு சவாரி சேவை உத்தியோகபூர்வமாக தொடக்கம் – சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு.!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாவட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மகவெவ குளத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய புதிய வசதியுடன் நேற்று (95) ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது.
இந்த ஆரம்ப விழாவில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக, நாத்தாண்டிய பிரதேச சபை தலைவர் சாகர விஜேசேகர உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நாத்தாண்டிய பிரதேச சபை, மகவெவ பிரதேச செயலகம், மற்றும் மகவெவ உற்பத்தி சங்கம் இணைந்து இந்த சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
மகவெவ குளம், சிலாபம் – கொழும்பு பிரதான வீதிக்கு அருகே அமைந்துள்ள முக்கிய சுற்றுலா மையமாகும். ‘தனியவல்லப’ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த குளம் சுமார் 169 ஏக்கர் பரப்பளவை கொண்டது. காலங்காலமாக விவசாய நடவடிக்கைகள் மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்பட்டு வருகிறது.
முன்பு ‘ஜப்பான் ஜபர்’ போன்ற நீர்த் தாவரங்களால் சூழப்பட்ட குளம், சமீபத்தில் பிரதேச மக்களின் முயற்சியால் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டது. இதன் பிறகு, குளத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா திட்டம் மகவெவ பிரதேச செயலகம் முன்வைத்தது.
இந்த திட்டத்தின் கீழ் பயணிகள் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ படகு சவாரி அனுபவிக்கலாம். தற்போது நாத்தாண்டியா பிரதேச சபையின் நேரடி மேற்பார்வை மற்றும் நிர்வாகத்துடனான படகு சேவை, எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சேவையின் தொடக்கத்தில், அப்பகுதி மீனவர்களுக்கு இடையிலான பாரம்பரிய ‘தெப்பம்’ வலிக்கும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த புதிய முயற்சி பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



