இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: குருநாகல் பிரதி மேயர் அஷர்தீன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்.!!!
குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயராக பணியாற்றி வந்த அஷர்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று (08) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீனின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த இடைநிறுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு மற்றும் சட்ட விவகார பணிப்பாளரான சிரேஷ்ட சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.
வணிகர் ஒருவரிடம் டெண்டர் ஒப்பந்தம் வழங்குவதற்காக 3 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், பத்தரமுல்லையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அஷர்தீனை கைது செய்தனர்.
குருநாகல் மாநகர சபையின் ஆட்சியை அமைப்பதற்காக ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததன் மூலம் அஷர்தீன் பிரதி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
