சுற்றுலாத்துறையால் மீண்டும் உயிர்பெறும் – மாட்டு வண்டிகள்.!!!
(கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்)
பண்டைய காலங்களில் இலங்கையர்களின் பிரதான போக்குவரத்துச் சாதனமாக விளங்கிய ‘திரிக்கல’ (Thirikkala) அல்லது ‘டான்டு’ (Tantu) எனப்படும் மாட்டு வண்டிகள், தற்போது சுற்றுலாத்துறையின் ஊடாக மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன.
முன்னொரு காலத்தில் தூரப் பயணங்கள், ஆன்மீக யாத்திரைகள் மற்றும் திருமணச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளுக்காக பெருமையுடன் பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள், நவீன வாகனங்களின் வருகையால் காலப்போக்கில் சமூக வாழ்க்கையிலிருந்து மறைந்து போனதாகக் கூறப்படுகிறது.
எனினும், தும்மலசூரிய – கட்டிமஹான தேவாலயத்தின் வருடாந்த திருவிழா காலங்களில் பக்தர்கள் இன்றும் மாட்டு வண்டிகளில் வருகை தரும் பாரம்பரியம் தொடர்கிறது.
இந்நிலையில், அழிந்து வரும் இந்த பாரம்பரியக் கலையை குடிசைத் தொழிலாகக் கொண்டு மாரவில – இஹல கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த டப்ளியூ. அசோக பிரியந்த குமார பெர்னாண்டோ என்பவர் இன்றும் மாட்டு வண்டிகளை தயாரித்து வருகிறார்.
தனது அனுபவத்தைப் பகிர்ந்த அவர், “சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒரு டான்டு வண்டி இருந்தது. யாரிடமும் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. பார்த்துப் பார்த்தே இந்தக் கலையை கற்றுக்கொண்டேன். தற்போது என்னிடம் 60 முதல் 70 ஆண்டுகள் பழமையான வண்டிகளும் உள்ளன. அதேபோல், நவீன காலத்திற்கு ஏற்றவாறு ஆடம்பரமான வண்டிகளையும் வடிவமைத்து வருகின்றேன். இலங்கையில் மிக உயரமான டான்டு வண்டியும் என்னிடமே உள்ளது” என தெரிவித்தார்.
தற்போது இந்த மாட்டு வண்டிகளுக்கான தேவை பெரும்பாலும் சுற்றுலாத்துறையைச் சார்ந்தே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக களுத்துறை, பேருவளை மற்றும் சிகிரியா போன்ற சுற்றுலா பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக இவ்வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், சித்திரைப் புத்தாண்டு காலங்களில் நடைபெறும் மாட்டு வண்டிப் பந்தயங்களுக்காகவும் (Race Carts) இவ்வண்டிகளுக்கான கேள்வி அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது வீட்டிலேயே மேலும் இரு பணியாளர்களின் உதவியுடன் இந்த வண்டிகளை தயாரித்து வரும் அவர், மரத்துடன் சேர்த்து இரும்பு, துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) மற்றும் பித்தளை போன்ற பொருட்களையும் பயன்படுத்தி வண்டிகளின் உறுதித்தன்மையை அதிகரித்து வருகிறார்.
“இது ஒரு குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து வேலைகளையும் மிக நுணுக்கமாக செய்வதால் ஒரு தரமான வண்டியை உருவாக்க அதிக நேரம் எடுக்கிறது. அதனால் சந்தையில் உள்ள கேள்விக்கேற்ப விநியோகம் செய்வதில் சவால்கள் உள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.
பாரம்பரியமான ஒரு வாகனக் கலையை நவீன தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து, அதை அழியாமல் பாதுகாத்து வரும் அசோக பெர்னாண்டோவின் முயற்சி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


