தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல்: 10 பேருக்கு வகுப்புத் தடை.!!!
அம்பாறை ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து 10 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த (04) ஆம் திகதி இரவு தொழில்நுட்ப பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘டி.ஜே’ இசை நிகழ்ச்சியின் போது இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த நிகழ்விற்கு முகாமைத்துவ பீட மாணவர்கள் வருகை தந்ததை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அது மோதலாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து அக்கரைப்பற்று காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் பல்கலைக்கழகத்திற்குள் சென்று சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் 10 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வகுப்புத் தடை விதித்துள்ளது.
மேலும், வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று காவல்துறையினரும் பல்கலைக்கழக அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.