மின்சாரக் கட்டணம் 18% அதிகரிப்பு: 95% நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை.!!!
இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மின்சார உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் மின்சாரத் துறையில் உருவான நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு காலாண்டும் அடுத்த காலாண்டும் இணைந்து மின்சாரத் துறையில் சுமார் 38 பில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதை சமன் செய்யும் நோக்கில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், 15 பில்லியன் ரூபாய் அரச மானியத்தை வழங்க அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் உள்ள மொத்த மின்சார நுகர்வோரில் வெறும் 5 சதவீதமானவர்களுக்கு மட்டுமே இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 95 சதவீத நுகர்வோருக்கு மின்சாரக் கட்டண உயர்வு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுதியாக தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் மின்சார விநியோகத்தை தடையின்றி தொடர்ச்சியாக வழங்கும் நோக்கில் இந்த சமநிலையான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.