புத்தளம் தள வைத்தியசாலையில்: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை.!!!
– கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ் –
புத்தளம் தள வைத்தியசாலையில் முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற சில முக்கிய வைத்தியசாலைகளில் மட்டுமே இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த இவ்வகையான சத்திரசிகிச்சை, தற்போது புத்தளம் தள வைத்தியசாலையிலும் முதன்முறையாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில மாதங்களாக முள்ளந்தண்டு தொடர்பான சத்திரசிகிச்சைகள் இவ்வைத்தியசாலையில் நடைபெற்று வந்தாலும், முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷெஸார் ஹமீத் தலைமையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த சிரேஷ்ட என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் உதை டி சில்வா மற்றும் லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் டாக்டர் நிர்மல் மாரசிங்ஹ ஆகியோரும் கலந்து கொண்டு மருத்துவ உதவி வழங்கினர்.
மேலும் நினைவிழக்கச் செய்யும் விசேட வைத்திய நிபுணரும் தனது பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.
சுமார் 40 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் செலவாகும் இந்த சத்திரசிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள தள வைத்தியசாலைகளில் இதுவரை இவ்வகையான முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படாத நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் இது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது முக்கியமான மருத்துவ முன்னேற்றமாக கருதப்படுகிறது.
எதிர்காலத்திலும் இவ்வாறான சத்திரசிகிச்சைகள் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


