வாகன விபத்துகள் அதிகரிப்பு –பொலிஸ் எச்சரிக்கை.!!!
இந்த ஆண்டின் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியை ஆய்வு செய்தபோது, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புகளுடன் கூடிய விபத்துக்கள் 18 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த காலப்பகுதியில் விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரதூரமான விபத்துக்கள் 94 ஆகவும், சிறு விபத்துக்கள் 49 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் சொத்து சேதங்களை ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கையும் 48 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பொலிஸார் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு பணிகளையும் முன்னெடுத்திருந்த போதிலும், இவ்வாறான நிலை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பாரதூரமான வாகன விபத்துக்களைத் தடுக்க பொதுமக்களும் சாரதிகளும் அதிக அவதானத்துடன் செயல்பட்டு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர கேட்டுக்கொண்டார்.