இரத்தினபுரியில் மண்சரிவு அபாயம்: 12 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.!!!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், 12 குடும்பங்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லேல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் உதாகலகம பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய அறிகுறிகள் மீண்டும் தென்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் வசித்து வந்த 12 குடும்பங்கள் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு முதன்முறையாக இப்பகுதியில் மண்சரிவு அபாயம் அடையாளம் காணப்பட்டிருந்தது. அதன் பின்னர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில், இப்பகுதி அதிக ஆபத்துள்ள மண்சரிவு வலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (22) காலை சுமார் 6.30 மணியளவில் மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.
தொடர்ந்து நிலைமைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.