மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் பாரிய தீ விபத்து: காரணம் குறித்து தீவிர விசாரணை.!!!
மட்டக்களப்பு நகரின் பிரதான வர்த்தக கடைத்தொகுதியில் இன்று (07) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிறுவர் ஆடையகம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பான தகவல் கிடைத்தவுடன், தீயணைப்பு பிரிவினரும் பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தால் பல வர்த்தக நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், குறிப்பிடத்தக்க அளவிலான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சேதங்களின் முழுமையான மதிப்பீடு இதுவரை வெளியிடப்படவில்லை.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மட்டக்களப்பு நகர மக்களிடையே இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.




