பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பல்கள்: கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ எனும் போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக இன்று (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இக்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததையடுத்து, இலங்கை கடற்படை தனது கடற்படை மரபுகளின்படி அவற்றை மரியாதையுடன் வரவேற்றது.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ‘PNS TAIMUR’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் நியாமத் சயீத் கான் (Niamat Saeed Khan) பணியாற்றுகிறார். அதேபோல் ‘PNS ASLAT’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் நாதிர் மதீன் அஃப்ரிடி (Nadir Mateen Afridi) உள்ளார்.
மேலும், இந்த போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து நடைபெறவுள்ள இருதரப்பு கடற்படைப் பயிற்சி “LION STAR V” நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வகையான நல்லெண்ண வருகைகள், இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையேயான நட்பு உறவுகளையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






