நுரைச்சோலை லக்விஜய மின் நிலைய சுற்றுச்சூழல் தாக்கம் ஆய்வுக்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்.!!!
–கற்பிட்டி எம்.ஹெச்.எம். சியாஜ்–
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்து பரிந்துரைகள் சமர்ப்பிப்பதற்காக, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த உபகுழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத் (சட்டத்தரணி) தலைமையேற்றுள்ளார்.
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, வலுசக்தி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு, நுரைச்சோலை மின் நிலைய செயற்பாட்டால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், குறித்த மின் நிலையத்தின் செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளனவா என்பதும் ஆராயப்பட்டது. இதனையடுத்து விரிவான ஆய்வுக்காக உபகுழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜேர்மனி, ஜப்பான், சீனா தூதரகங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாடி, அவர்களின் மின் நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை தொழில்நுட்பங்களைப் பெறும் வகையில் அதிகாரிகளுக்கு பயிற்சித் திட்டம் வழங்க முன்மொழியப்படுவதாக குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.



