வெசாக் காலத்தில் பிளாஸ்டிக், பொலித்தீன் பயன்படுத்தத் தடை – மீறினால் கடும் நடவடிக்கை.!!!
எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் நடைபெறும் அலங்கார நிகழ்வுகள் மற்றும் தன்சல் வழங்கல்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் நடைமுறையில் உள்ள சட்டங்களின் படி, குறிப்பிட்ட காலப்பகுதியில் சில பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை விற்பனை செய்வதும், காட்சிப்படுத்துவதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்கள்:
பிளாஸ்டிக் உறிஞ்சுக் குழாய்கள் (Straws), கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள்.
உணவுப் பொதியிடும் பொருட்கள்:
ரெஜிபோர்ம் (Regiform), உணவுப் பெட்டிகள் மற்றும் லஞ்ச் சீட்.
அலங்காரப் பொருட்கள்:
பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பொலிஎத்திலீன் அல்லது பொலிபுரோப்பிலீன் கொண்டு தயாரிக்கப்படும் அனைத்து வகையான அலங்காரப் பொருட்கள்.
2017 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மத மற்றும் கலாசார நிகழ்வுகளின் போது இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்துள்ளது.
எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெசாக் நிகழ்வுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நடத்துமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.