வெளிநாட்டவர்களுக்கு வீடு வாடகைக்கு வழங்குவோர் பொலிஸுக்கு அறிவிக்க வேண்டும் – பொலிஸார் அறிவிப்பு.!!!
வெளிநாட்டவர்களுக்கு வீடு அல்லது சொத்துக்களை வாடகை அடிப்படையில் வழங்கும் வீட்டு உரிமையாளர்கள், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப். யு. உட்லர் அவர்களால் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தரும் சில வெளிநாட்டினர், வாடகை வீடுகளில் தங்கியிருந்து பல்வேறு இணையவழி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, வெளிநாட்டவர்களுக்கு வீடுகள் அல்லது தங்குமிட வசதிகளை வழங்கும் நபர்கள் இனிவரும் காலங்களில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயற்பாடுகளும் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.