‘டித்வா’ அனர்த்தத்தால் வீடிழந்த கண்டி மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்.!!!
‘டித்வா’ அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மீள்குடியேற்றத்திற்குத் தேவையான காணிகளை விடுவிக்கும் செயல்முறையின் முன்னேற்றம் குறித்து பிரதேச செயலக மட்டத்தில் கேட்டறிந்த ஜனாதிபதி, இந்நிலையில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்த்து அந்தப் பணிகளை விரைந்து நிறைவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் கண்டி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஒவ்வொரு பிரதேச செயலாளரிடமும் தனித்தனியாகக் கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தாமதமின்றி வழங்குவதற்கும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க அதிகாரிகள் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.







