லண்டனில் பொதுநலவாய செயலாளர் நாயகத்தை சந்தித்த – பிரதமர் ஹரினி அமரசூரிய.!!!
லண்டனில் பொதுநலவாய செயலாளர் நாயகத்தை சந்தித்த பிரதமர் ஹரினி அமரசூரிய
நிலைபேறான அபிவிருத்திக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதி
ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ இல்லத்தில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கௌரவ ஷெர்லி அயோர்கோர் போச்வே அவர்களை நேற்று (21) சந்தித்து உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின் போது காலநிலை மாற்றம், சர்வதேச காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான தொடர்ச்சியான ஆதரவுகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சவால்களிலிருந்து மீள்வது, நிலையான அபிவிருத்தி இலக்குகளை எய்துவது மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வெளிப்படையான நல்லாட்சியை முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பொதுநலவாய செயலகம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகள் மற்றும் சர்வதேச ஆதரவுகளுக்காக பிரதமர் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.


