போதைக்கு எதிராக மக்கள் போராட்டம் – நூற்றுக்கணக்கானோர் வீதிக்கிறங்கினர்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
புத்தளம் நகரில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக நேற்று (25) நாகூர் ஜும்மா பள்ளிவாசல் பகுதியை மையமாகக் கொண்டு பாரிய மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
புத்தளத்தின் முக்கிய அமைப்புகளான புத்தளம் ஜம்மிய்யதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் புத்தளம் மாநகர சபை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் குறித்த போதை எதிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தளம் நகரில், குறிப்பாக நாகூர் பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனால் குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவிகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்வதாகவும், பெண்கள் அச்சத்துடன் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டனர்.
இலங்கை ஜனாதிபதி அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் “போதையற்ற நாட்டை உருவாக்குவோம்” என்ற வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும், புத்தளம் பொலிஸாரின் ஆலோசனைகளுக்கிணங்கவும் இந்த எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“எமது பிரதேசத்தை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமானால் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் பொதுமக்களும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்” என போராட்டத்தில் கலந்து கொண்டோர் வலியுறுத்தினர்.
இந்தக் கண்டனப் பேரணியில் புத்தளம் மாநகர முதல்வர் ரின்சாத் அஹமத், புத்தளம் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் மெளலவி ஜிப்னாஸ், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர், மாநகர சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
புத்தளம் மண்ணில் இருந்து போதைப்பொருள் எனும் அரக்கனை முற்றாக ஒழிக்கும் வரை இவ்வாறான விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




