புத்தளம்–அருவைக்காடு ரயில் பாதையில்: பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்க பொதுமக்கள் கோரிக்கை.!!!
-கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்-
புத்தளத்திலிருந்து அருவைக்காடு வரையிலான ரயில் பாதையில் மக்கள் பயணப் போக்குவரத்து ரயில் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார நோக்கை மட்டுமே மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதை, நீண்ட காலமாக சுண்ணக்கல் அகழ்வு மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புத்தளம் மாவட்டத்தில் உள்ள எழுவன்குளம், கரைத்தீவு, சேராக்குழி, கங்கைவாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பயணிகள் ரயில் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், பொருத்தமான இடத்தில் ரயில் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தளம் மாவட்டம் மின்சாரம், சீமேந்து, விவசாயம் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட துறைகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்கி வருகின்றது. இதன் அடிப்படையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ரயில் பாதையை பயணிகள் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கை, புத்தளம் “தூய தேசத்திற்கான கட்சி” தலைவர் இஷாம் மரிக்கார் ஊடாக அரசுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



