ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறப்பு: கலா ஓயா கரையோர தாழ்நில மக்களுக்கு அவசர எச்சரிக்கை.!!!
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மேல்பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேல் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் கலாபெவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்குள் பாயும் நீரின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் வான்கதவுகள் கட்டப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 12 வான்கதவுகளும் பின்வரும் அளவுகளில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, 04 வான்கதவுகள் தலா 06 அடி வரையும், 04 வான்கதவுகள் தலா 05 அடி வரைவரையும், 04 வான்கதவுகள் தலா 04 அடி வரையும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையினால் வினாடிக்கு சுமார் 14,287 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கலா ஓயாவின் இருபுறங்களிலும் அமைந்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் ஓயாவை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.