சிறையில் பிள்ளையானை ராஜபக்ஷக்கள் சந்தித்தனர் – அசாத் மௌலானா வாக்குமூலம்.!!!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்) என்பவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்ததாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பெய்ரிஸ் இன்று (20) நீதிமன்றத்தில் வெளியிட்டார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் பிள்ளையனுக்குப் பிணை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த சந்திப்பின் போது அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பிள்ளையனின் முன்னாள் தனிச் செயலாளர் அசாத் மௌலானாவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது பிரான்சில் வசித்து வரும் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.