இடைநீக்கத்தில் இருந்தும் ஊதியம் பெறும் இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள்: இரட்டை வருமான சர்ச்சையால் பரபரப்பு.!!!
பல்வேறு ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் காரணமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ந்து சம்பளம் பெற்று வரும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சாரதிகள் தொடர்பான விவகாரம் நாடாளுமன்றத்தில் கவனம் பெற்றுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழு, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கூடியபோது இந்த விடயம் விரிவாக ஆராயப்பட்டது.
குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் சமர்ப்பித்த தகவல்களின்படி, ஒழுக்காற்று மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகள் காரணமாக சுமார் 400 முதல் 500 வரையிலான சாரதிகள் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், வழக்குகள் மற்றும் சட்ட நடைமுறைகள் நீடித்து வருவதால், அவர்களில் பலர் தொடர்ந்து தங்களது அடிப்படைச் சம்பளத்தைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சில சாரதிகள் தனியார் பேருந்து சேவைகளில் சாரதிகளாகப் பணியாற்றி வருவதுடன், அரச சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு இரட்டை வருமானம் ஈட்டி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலைமை குறித்து கடும் கவலை வெளியிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
அத்துடன், போக்குவரத்துத் துறையின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட துணைக் குழுவின் இறுதி அறிக்கையும், தொடருந்து திணைக்கள மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கையும் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்த நிலையில், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.