கடற்கரையில் கரை ஒதுங்கிய நெகிழி மணிகள் குறித்து விசேட கள ஆய்வு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்.எஸ்.சி. எலசா III (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets) தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப்பகுதிகளிலும் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொங்கனத்த மற்றும் பளுக்காத்துறை கடற்கரைப் பகுதிகளில் பெருமளவில் நெகிழி மணிகள் கரை ஒதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த கடற்கரைப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை முறையாகத் திட்டமிடும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை (19) விசேட கள ஆய்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, கடற்கரை சுத்திகரிப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வனாத்தவில்லு பிரதேச செயலாளர் ஆர். பிரபாகரன், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சமந்த குணசேகர, அதே ஆணையத்தின் பொது மேலாளர் ஜகத் குணசேகர, பூக்குளம் கிராம அலுவலர் சுசந்த குமார, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் கள உதவியாளர் ஷமில விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர்.
விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய இந்தச் சிறிய நெகிழி மணிகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, இம்மணிகளை மீன்கள் மற்றும் கடல் ஆமைகள் உணவாக தவறாக கருதி உட்கொள்ளும் அபாயம் உள்ளதால் கடல்சார் உணவுச் சங்கிலி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கள ஆய்வின் முடிவில், பிரதேச செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரை ஒருங்கிணைத்து கடற்கரை சுத்திகரிப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. மணலில் கலந்துள்ள நுண்ணிய நெகிழி மணிகளை அகற்றுவது சவாலான பணியாக இருப்பதால், இதற்கென விசேட தொழில்நுட்ப முறைகளையும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடல் வளங்களையும் கடற்கரை சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


