விமானிகள் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் சிறப்பு விசா.!!!
தென் கொரியாவின் ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால், மஞ்சள் கடலில் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கைத் தொழிலாளர்களுக்கு தென் கொரிய அரசாங்கம் சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2022 ஆகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மீன்பிடிப் படகில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று இலங்கைத் தொழிலாளர்களும், படகின் கொரிய கேப்டனும் இணைந்து விபத்தில் சிக்கிய இரண்டு போர் விமானிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தேசிய நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிறப்புமிக்க உயிர்காக்கும் பணியைப் பாராட்டும் வகையில், தற்காலிக E-9 விசாவில் இருந்த மூன்று இலங்கைத் தொழிலாளர்களில் இருவருக்கு தென் கொரிய நீதி அமைச்சகம் E-7-4 திறன்மிகு தொழிலாளர் விசாவை வழங்கியுள்ளது.
இந்த விசா இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுவதுடன், தொடர்ந்து நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
மற்றொரு இலங்கைத் தொழிலாளி ஏற்கனவே நீண்டகால வசிப்பிட விசாவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் வெளிநாட்டினருக்கு, தென் கொரியாவில் நீண்டகாலம் சட்டப்பூர்வமாக வசிப்பதற்கான ஆதரவை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என தென் கொரிய நீதி அமைச்சர் ஜங் சுங்-ஹோ தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர்களின் மனிதநேய செயலுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தென் கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள முக்கியமான கௌரவமாக பார்க்கப்படுகிறது.