வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கை துரிதம்; பாதுகாப்புத் தரப்புக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்.!!!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை விரைவில் விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பின் தேவைக்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில், எந்தக் காணிகளை விடுவிக்க முடியும், எந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், பாதுகாப்புத் தேவைகளுக்காக அவசியமான காணிகளின் அளவை தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பில் இருந்து சிந்தித்து, விடுவிக்கக்கூடிய அதிகபட்ச காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மீளக் கையளிக்கப்படும் காணிகளுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்ஹ, காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




