இலங்கை–மாலைதீவு 60 ஆண்டு நட்பு உறவு: கொழும்பில் மரக்கன்று நட்ட மாலைதீவு ஜனாதிபதி.!!!
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவை நினைவுகூரும் வகையில், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு இன்று (04) கொழும்பில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இன்று பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள விகாரமஹாதேவி பூங்காவில் இந்த மரக்கன்றை நட்டார்.
இந்த நிகழ்விற்காக விகாரமஹாதேவி பூங்காவிற்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அன்புடன் வரவேற்றார். மேலும், இரு நாடுகளினதும் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருபுறங்களிலும் திரண்டிருந்த சிறுவர்கள் மாலைதீவு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலி பல்தசார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை–மாலைதீவு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இந்த மரக்கன்று நடுகை நிகழ்ச்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
