எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த QR முறை கடுமை: இலங்கையில் புதிய கட்டுப்பாடுகளுக்கு அரசு தயார்.!!!
நாட்டின் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவும், எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் QR முறைமை மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சர் அனுர குணதிலக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீட்டு (Quota) மற்றும் QR முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் நுகர்வில் ஓரளவு குறைவு ஏற்பட்டிருந்தாலும், தற்போதும் நாட்டின் வழங்கல் திறனை விட தேவை அதிகமாகவே காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை பெருமளவு அந்நியச் செலாவணியை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், QR முறைமையை மேலும் வலுப்படுத்தி நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேவையற்ற எரிபொருள் நுகர்வை குறைத்து, தேசிய பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை தணிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
எரிபொருள் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் இந்த நடவடிக்கை, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.