காஸா நிவாரண கப்பலில் பயணித்த இலங்கைப் பெண் செயற்பாட்டாளர் ஸமீரா – விரைவில் நாடு திரும்புவார்.!!!
காஸா மக்களுக்கான நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்றிருந்த “Global Sumud Flotilla” கப்பல், கடந்த 18 ஆம் திகதி சர்வதேச கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தில் கடத்தப்பட்டிருந்த இலங்கைப் பெண் செயற்பாட்டாளர் ஸமீரா மஹ்புப்தீன் விடுவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மனிதநேய செயற்பாட்டாளர்கள் பயணித்த குறித்த கப்பல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதில் இருந்த செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் இலங்கைப் பிரஜையான சகோதரி ஸமீரா மஹ்புப்தீனும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரின் விடுதலையை வலியுறுத்தி சுதந்திர ஃபலஸ்தீன் இயக்கம் (Free Palestine Movement), பல்வேறு சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து இலங்கை வெளிவிவகார அமைச்சும், வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவும் உடனடி தலையீடுகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் க்விரின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான மனிதநேயமற்ற அணுகுமுறை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு கவலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக விடுவிக்கப்படும் செயற்பாட்டாளர்களின் பட்டியலில் ஸமீரா மஹ்புப்தீனும் இடம் பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
விடுதலையான பின்னர் ஸமீரா, ஏனைய செயற்பாட்டாளர்களுடன் துருக்கியின் இஸ்தான்புல் நகரை வந்தடைந்து அங்கிருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஸமீராவின் விடுதலைக்காக துரிதமாக செயற்பட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சு, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ஃபலஸ்தீனுக்கான இலங்கைப் பிரதிநிதி பௌசர் பாரூக் மற்றும் சுதந்திர ஃபலஸ்தீன் இயக்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.