வைத்தியசாலையில் கட்டாக்காலி நாய் தாக்குதல் – இளம் தாய் மற்றும் குழந்தை சிகிச்சைக்காக அனுமதி.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் குழந்தைக்கு சிகிச்சை பெறச் சென்ற இளம் தாய் ஒருவர் கட்டாக்காலி நாய் கடியால் காயமடைந்து அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. புத்தளம் – மன்னார் வீதி, சோல்டன் பகுதியில் வசிக்கும் இளம் தாய் ஒருவரே இவ்வாறு நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த தாய் நாய் கடியால் பயந்து ஓடியபோது, அவருடன் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டிருந்த குழந்தை தவறி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குழந்தையின் தலையில் அடிபட்டு, குழந்தையும் சிறுவர் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் தாய், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நீண்ட காலமாக நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹமத் உள்ளிட்ட அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினருடன் இணைந்து நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹமத் கருத்து தெரிவிக்கையில், புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், வைத்தியசாலையைச் சுற்றி பாதுகாப்பு சுற்றுமதில் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் கட்டாக்காலி நாய்களின் நுழைவைத் தடுப்பதே நோக்கமாக இருப்பதாகவும், திட்டம் சில காரணங்களால் தாமதமாகி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசலுடன் இணைந்து விரைவில் இதற்கான தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

