வாகன இலக்கத்தகடு மாற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – பொலிசார் எச்சரிக்கை.!!!
புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அதிகாரப்பூர்வ இலக்கத்தகடுகள் கிடைப்பதில் நீண்டகால தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சிலர் இதனை சாதகமாக பயன்படுத்தி சட்டவிரோத மாற்றங்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அசல் இலக்கத்தகடுகளை பயன்படுத்தாமல், சில வாகன உரிமையாளர்கள் பிளாஸ்டிக் அல்லது அலங்கார வடிவிலான இலக்கத்தகடுகளை தயாரித்து பயன்படுத்துகின்றனர். மேலும் விதிமுறைகளுக்கு மாறாக எழுத்து வடிவம், நிறம் மற்றும் அளவுகளை மாற்றி இலக்கத்தகடுகளை அமைத்துக் கொள்வதும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய சட்டவிரோத மாற்றங்கள் வாகனங்களை சரியாக அடையாளம் காண முடியாத நிலையை உருவாக்குவதுடன், விபத்துகள் மற்றும் குற்றச்செயல்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் விசாரணை நடவடிக்கைகளுக்கும் பெரிய தடையாக அமைகிறது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் விதிமுறைகளை மீறி மாற்றிய இலக்கத்தகடுகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு எதிராக உடனடி அபராதம் விதிக்கப்படுவதுடன், தேவையான சூழ்நிலைகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான மீறல்கள் தொடர்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே அரசாங்கம் வழங்கிய அசல் இலக்கத்தகடுகளை மட்டுமே பயன்படுத்துமாறு வாகன உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்காலிக சிரமங்களை காரணமாகக் கொண்டு சட்டவிரோத மாற்றங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.