மீனவ கிராமத்தை பாதுகாக்க: மண் வேலி அமைக்கும் பணி ஆரம்பம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
கற்பிட்டி கீரிமுந்தல் (டச்பே) மீனவ கிராமத்தை கடலரிப்பின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், தற்காலிக முன்னோடி நடவடிக்கையாக கடற்கரையில் மண் வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடலரிப்பு காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகி வரும் கீரிமுந்தல் மீனவ கிராமத்தை பாதுகாத்துத் தருமாறு, கீரிமுந்தல் கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் தினேஷ் சுரஞ்சன் பெர்னாண்டோ தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, கரையோர வள பாதுகாப்பு திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம், கற்பிட்டி பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத்தந்தைகளின் தலைமையில் இறை வழிபாடுகளுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களது கிராமத்தையும் கடற்கரையையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் கீரிமுந்தல் கிராம மக்கள் ஒன்றிணைந்து இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கரையோர வள பாதுகாப்பு திணைக்களத்தின் கற்பிட்டி பிரதேச அலுவலக அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், கீரிமுந்தல் கிராமிய மீனவ அமைப்பின் பங்களிப்புடன் சுமார் 80 மீட்டர் நீளமும் 10 அடி அகலமும் கொண்ட தரமான மண் வேலி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆலய நிர்வாக சபையினர், மீனவ சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு, கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண் வேலி அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்த பின்னர், இப்பகுதியில் நிலவும் கடலரிப்பு அபாயத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை பொதுமக்களும் அதிகாரிகளும் வெளியிட்டுள்ளனர்.



