கடலில் அவசரநிலைகளை எதிர்கொள்ள மீனவர்களுக்கு பயிற்சி; கடற்படை முன்னெடுப்பு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், மீனவ சமூகத்தினருக்கு அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அறிவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி நிகழ்ச்சிகள் திருகோணமலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த செப்டெம்பர் 02ஆம் திகதி பூநச்சிமலையிலும், செப்டெம்பர் 15ஆம் திகதி கோட்பே மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டும் இப்பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், கட்டளை மருத்துவத் திணைக்களத்தினால் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து இப்பயிற்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, மீனவ சமூகத்தினருக்கு அடிப்படை உயிர்காக்கும் நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது மற்றும் சிறந்த மனநலத்தைப் பேணுவது தொடர்பிலும் மீனவ சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பை இம்முயற்சி மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.







