அம்பிட்டியே சுமனரதன தேரர் அதிரடி அறிவிப்பு – ஜனாதிபதி அனுரவுக்கு முழு ஆதரவு, “ராஜபக்ச முகாம்” விலகல்.!!!
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்து கலந்துரையாடியதையடுத்து, அவருக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அம்பிட்டியே சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனிமேல் தாம் “ராஜபக்ச நிகாய” அல்லது “ராஜபக்ஷ முகாம்” என அழைக்கப்படும் அரசியல் அணியிலிருந்து முற்றாக விலகிச் செயற்படப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்களை அவர், ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் வெளியிட்ட காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது அவரைச் சந்திக்க முயற்சி மேற்கொள்வதாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்தால் அடுத்தகட்டமாக தீவிரமான நடவடிக்கையை எடுக்கத் தயார் எனவும் முன்னதாக அறிவித்திருந்ததாக தேரர் கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால், தமது அறிவிப்புக்குப் பின்னர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு (PSD) அதிகாரிகள் தலையிட்டு, ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த ஏற்பாடுகள் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற வழிவகை செய்யப்பட்டதாக அம்பிட்டியே சுமனரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.