சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் உயிர் காப்பு அங்கிகள் அணிவது கட்டாயம் – கடற்றொழில் திணைக்களம் எச்சரிக்கை.!!!
நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக கடலோரக் கடல் பகுதிகளில் காலநிலை சீரற்றதாக காணப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து மீனவர்களும் கட்டாயமாக உயிர் காப்பு அங்கிகள் (Life Jackets) அணிய வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (13) காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புத்தளம், சிலாபம் முதல் காலி, மாத்தறை வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் கடற்றொழிலுக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என்றாலும், சிறு படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவோர் வானிலை அறிக்கைகள் குறித்து தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடல் அதிகமாக கொந்தளிப்பாகக் காணப்பட்டால் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு திரும்பவோ அல்லது கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவோ நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கடலுக்குப் புறப்படும் தருணத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகள் நிறைவடைந்து பாதுகாப்பாக கரை திரும்பும் வரை முழு நேரமும் உயிர் காப்பு அங்கிகளை அணிந்திருப்பது கட்டாயமாகும் என்றும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
அத்துடன், பலநாள் மீன்பிடிக் கலன்கள் வழமையான முறையில் துறைமுகங்களில் இருந்து வெளியேறவும் மீண்டும் கரை திரும்பவும் முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களமும் கடற்றொழில் திணைக்களமும் அவ்வப்போது வெளியிடும் வானிலை அறிவிப்புகளை தீவிரமாக கவனித்து, தமது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அனைத்து மீனவ சமூகத்தினரையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.