இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.43.86 இலட்சம் மோசடி; 23 வயது இளைஞர் கைது.!!!
இணையவழி தொழில் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என பொதுமக்களை நம்பவைத்து பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளில், சந்தேகநபர் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, இணையவழி வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் என்ற பெயரில் பணம் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் மொத்தமாக ரூ.43,86,219 பெறப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து ரூ.5 இலட்சம் தனிப்பட்ட தேவைகளுக்காக முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இணையவழி வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகள் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே, சமூக வலைத்தளங்கள் அல்லது இணையதளங்கள் ஊடாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
மேலும், அதிக லாபம் அல்லது விரைவான வருமானம் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பணம் செலுத்துவதைத் தவிர்த்து, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.