ரஷ்ய எரிபொருள் நிலையங்களை தாக்க வேண்டாம்; ஸெலென்ஸ்கியிடம் ட்ரம்ப் கோரிக்கை.!!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கில் இடம்பெறும் போர் முக்கிய காரணமல்ல எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், உக்ரைன்–ரஷ்ய போரும் அதன் தாக்கங்களுமே எரிபொருள் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பொருளாதார மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து உக்ரைன் மேற்கொண்டு வரும் நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களால், அந்நாட்டின் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும்போது, எரிபொருள் கட்டமைப்புகளை தவிர்த்து வேறு இலக்குகளைத் தேர்வு செய்யுமாறு ஸெலென்ஸ்கியிடம் தாம் தெரிவித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“எரிபொருள் இலக்குகளை தாக்க வேண்டாம்” என்பதே உக்ரைனுக்கு தாம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அவற்றை தவிர்க்குமாறு ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை, உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் விநியோகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.