சவூதியின் குற்றச்சாட்டை நிராகரித்த ஹவுதி – “மக்கா எங்கள் இலக்கு அல்ல”.!!!
சவூதி அரேபியாவின் மக்கா, ஜெட்டா, தைப் உள்ளிட்ட நகரங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், சவுதி பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மக்கா நகரின் தெற்குப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டதுடன், சவுதி அரசு குடிமக்களை எச்சரித்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சவுதி அரேபிய பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்ததாகவும், பின்னர் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியாகிய நிலையில், மக்கா நகரை தாங்கள் குறிவைக்கவில்லை என்றும், புனித நகரமான மக்கா மீது எந்தவித தாக்குதலும் நடத்தவில்லை என்றும் ஹவுதி அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹவுதி அமைப்பின் உறுப்பினரான ஹசீம் அல்-ஆசாத், மக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது “பழைய பொய்” என தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா சரீயும் சவுதி தரப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவை “ஜோடிக்கப்பட்டவை மற்றும் பொய்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
சவுதி ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமியர்களின் புனித தலங்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் ஹவுதி தரப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.