நான்கு கிராமிய வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் – ஆதம்பாவா எம்.பி.யினால் அங்குரார்ப்பணம்.!!!
-எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.
இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அப்கர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பங்கேற்புடனும் நடைபெற்றது.
இதன்போது ரூபா 4 மில்லியன் செலவில்
அட்டாளைச்சேனை வட்டானை வீதி, ரூபா 3 மில்லியன் செலவில் பாலமுனை வம்மியடி வீதி, 3 மில்லியன் செலவில் ஒலுவில் மஹாபொல வீதி, ரூபா 2 மில்லியன் செலவில் தீகவாபி ஜெயலத்த வீதி ஆகிய நான்கு வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச சபையினுடைய தவிசாளர் உவைஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், பிரஜா சக்தி தவிசாளர்கள், உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித்திட்டங்கள், பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலனுக்கும் பெரும் பங்களிப்பாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.









