ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மே 20, 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு–அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம்.!!!
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் முதற்கட்டமாக மே 20 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் செல்லும் ஜனாதிபதி, பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும் போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம எகட்ட” (முழு நாடும் ஒன்றாக) தேசிய வேலைத்திட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மே 22 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நிந்தவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன் அம்பாறை நகரில் அமைக்கப்படவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக்கான கட்டுமானப் பணிகளையும் இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் இறுதி நிகழ்வாக அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.