ஈரான் மீது தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம் – உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு : ட்ரம்ப் அறிவிப்பு.!!!
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “நாளை ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க இராணுவத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஆனால், ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கையொன்றை எட்ட முடியாவிட்டால், உடனடி அறிவிப்பின் பேரில் ஈரான் மீது முழுமையான மற்றும் பாரியளவிலான தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருக்குமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கையை எட்டுவதற்காக கடுமையான அழுத்தங்கள் நிலவிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை விரைவில் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையையும் ட்ரம்ப் முன்பு வெளியிட்டிருந்தார். எனினும், அந்த உடன்படிக்கை எட்டப்படாத பட்சத்தில் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.