“ரட்டம ஏகட்ட” தேசிய செயல்பாட்டின் கீழ் காத்தான்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
“ரட்டம ஏகட்ட” தேசிய செயல்பாட்டின் விஷட போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸார் பொதுமக்களுடன் இணைந்து வாகனங்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு இன்று (18) காலை காத்தான்குடியில் நடைபெற்றது.
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் நோக்கில் “அகன்று செல்” (Go Away) என்ற தொனிப்பொருளில் இந்த விசேட விழிப்புணர்வு செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதான பஸ்தரிப்பு நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜ.பி. அழகோன் தலைமையில் முச்சக்கர வண்டிகள், பேரூந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
“அகன்று செல்” என்ற தொனிப்பொருளின் மூலம் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையிலிருந்து சமூகத்தை விடுவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1818 என்ற தொலைபேசி இலக்கத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஊர் முழுவதும் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் இந்த விழிப்புணர்வு செய்தி ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொலிஸார், பிரஜாசக்தி தவிசாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.









