குருக்கள்மடம் மனிதப் புதைகுழி சந்தேகம்: பரிசோதனை அறிக்கை 22க்குள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு.!!!
மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதேசத்தில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வழக்கின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி குரல்கள் அமைப்பினால் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம், கடந்த மார்ச் மாதம் குருக்கள்மடம் பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அப்போது எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மனுதாரர்கள் மேலும் மூன்று இடங்களை சந்தேகத்தின் பேரில் அடையாளம் கண்டு, தங்களது சொந்தச் செலவில் கருவிகள் மூலம் அவை பரிசோதிக்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு கடந்த மே 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மே 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் சந்தேகிக்கப்படும் இடங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வழக்கு தொடர்பில் இன்று (18) மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிப்பதாக பேராசிரியர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த வழக்கு எதிர்வரும் மே 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.

