இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி: இந்திய படகு மற்றும் 9 மீனவர்கள் கைது.!!!
தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடல் எல்லையில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) மீறி சட்டவிரோதமாக மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்றையும், அதில் பயணித்த 9 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கற்பிட்டி நிருபர் எம்.எச்.எம். சியாஜ் தெரிவிக்கையில், புதன்கிழமை (ஜூலை 22) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடற்படையினரின் தகவலின்படி, இரணைதீவிற்கு தெற்கே அமைந்துள்ள இலங்கை கடல் எல்லைக்குள் 50-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

