காத்தான்குடி கடற்கரையில் பாரிய தீ விபத்து: மீன்வாடி முற்றாக எரிந்து சாம்பல்.!!!
• மீன்பிடி உபகரணங்கள் உட்பட பல லட்சம் ரூபாய் சொத்துகள் நாசம்; பொலிஸார் விசாரணை.
-எம்.ரி.எம்.யூனுஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை ஏத்துக்கால் பகுதியில் இன்று (28) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், மீன்வாடி ஒன்று முற்றாக எரிந்து சாம்பலானது.
தீ விபத்து காரணமாக மீன்வாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளின் இயந்திரங்கள், மீன்பிடி வலைகள் மற்றும் ஏராளமான மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ பரவியதைத் தொடர்ந்து பிரதேச மக்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு கடுமையாக முயற்சித்தனர். எனினும் தீ வேகமாக பரவியதால் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல், மீன்வாடி முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது.
இந்தச் சம்பவத்தால் கடற்கரைப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதுடன், தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





