களுவாஞ்சிக்குடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு.!!!
• போலி இலக்கத்தகடுடன் சென்ற 25 வயது இளைஞர் கைது.
களுவாஞ்சிக்குடியில் திருடப்பட்ட 8 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய மோட்டார் சைக்கிள், பாணமை பகுதியில் மீட்கப்பட்டதுடன், அதனைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் 25 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த வாரம் (22) கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது காணாமல் போயிருந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், பாணமை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், செவ்வாய்க்கிழமை (28) பாணமை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.
விசாரணையில், மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டை மாற்றி, போலி இலக்கத்தகடுடன் கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, பொதுமக்கள் தமது வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துவதுடன், மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டாயம் பாதுகாப்புப் பூட்டு பொருத்தி, அவதானத்துடன் செயற்படுமாறும் கள்வர்கள் நடமாட்டம் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
