இலங்கை கடற்படைக்கு புதிய அதிகாரிகள்; 69ஆவது ஆட்சேர்ப்பில் 47 பேருக்கு நியமனம்.!!!
இலங்கை கடற்படையின் 69ஆவது மாணவச் சிப்பாய் அதிகாரி ஆட்சேர்ப்பின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் நேற்று (28) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கடற்படையின் நிறைவேற்று, பொறியியல், விநியோகம், கடற்படை காலாட்படை, மின்சார மற்றும் இலத்திரனியல், ஒழுக்கவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட 43 ஆண் மற்றும் 4 பெண் மாணவச் சிப்பாய் அதிகாரிகள் உட்பட மொத்தம் 47 பேருக்கு கடற்படைத் தளபதியால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, 69ஆவது மாணவச் சிப்பாய் அதிகாரி ஆட்சேர்ப்பிற்காக விண்ணப்பித்த 625 பேரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த 47 மாணவச் சிப்பாய் அதிகாரிகள், இலங்கை கடற்படையின் எதிர்காலத் தலைமையை பிரதிநிதித்துவப்படுத்துவோர் எனத் தெரிவித்தார்.
மேலும், உலகத் தரம் வாய்ந்த தொழில்முறைப் பயிற்சிகளை வழங்கி, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தொழில்முறைத் திறன்களுடன் கூடிய சிறந்த கடற்படை அதிகாரிகளாக அவர்களை உருவாக்க கடற்படை முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடல்சார் இறையாண்மையைப் பாதுகாத்து, நாட்டின் கௌரவத்தை நிலைநிறுத்தும் பணியில் நேர்மை, தைரியம் மற்றும் பொதுநல உணர்வுடன் செயல்படுவது ஒவ்வொரு கடற்படை அதிகாரியின் உயரிய பொறுப்பாகும் என்றும், வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதம் கடற்படை அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இளைஞர், யுவதிகளை கடற்படையில் இணைவதற்கு ஊக்குவித்த பெற்றோருக்கு தனது நன்றியையும் பாராட்டையும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, துணைத் தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள் மற்றும் புதிய நியமனங்களைப் பெற்ற மாணவச் சிப்பாய் அதிகாரிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.