இந்திய கடற்படையின் ‘INS SHARDA’ கப்பல் இலங்கை வருகை.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS SHARDA’ கப்பல், செயல்பாட்டு மற்றும் சேவைத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் புதன்கிழமை (10) இலங்கையை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை, கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.
Offshore Patrol Vessel (OPV) வகையைச் சேர்ந்த ‘INS SHARDA’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் கார்த்திக் சச்சதேவா (Kartik Sachdeva) கடமையாற்றி வருகின்றார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கப்பலின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முக்கிய சுற்றுலா மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருகை, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் கடற்படை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.





