சுரேஷ் சாலிக்கு ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அறிவுரை: உண்ணாவிரதத்தை கைவிட்டு சட்ட ரீதியாகப் போராடுங்கள்.!!!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கியமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்பியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சுரேஷ் சாலி கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
தான் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, சுரேஷ் சாலி தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எவ்வித பிணையும் இன்றி 22 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சுரேஷ் சாலி அவர்கள் உண்மையிலேயே நிரபராதியாக இருந்தால், அவர் மனவலிமையுடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, நீதிமன்றத்தின் ஊடாக வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொண்டு தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுத்துவைப்பு, கைதிகளின் உரிமைகள் மற்றும் நீதியை நிலைநாட்டும் சட்ட நடைமுறைகள் குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.